என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, August 5, 2014

மரண வலி

உடைத்து வெளிவந்த
என் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தேன்..

முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்தேன்....

தேக்கி வைத்த
என் சோகங்கள் - நன்றாய்
தாக்கி விட்டது உள்ளத்தை!

புதைத்து வைத்த துன்பங்கள்
மேற்கிளம்பி
வதைத்து என்னை பாடுபடுத்தியது!

வேரோடு என் இதயத்தை
பிடுங்கிச் சென்றுவிட்டாய் - நீ
ஊருக்குப் போகையிலே!

மறைத்து வைத்த
பாசத்தை எல்லாம் மெதுவாய்
உரைத்துவிட்டது உன் பிரிவு!

என் ஜனனத்தின்
மறுபிறப்பாய் நீதானே இருக்கிறாய்
என் மரணத்தின்
வலியாகவும் நீயேதான் இருக்கின்றாய்!

பனித்துளியா நீ?

என் ஞாபகப் புற்களில்
அமர்ந்து கொண்ட
பனித் துளியா நீ?

இதயத்தின் கீதங்களை
மொழிபெயர்த்துப் பாடிய
இளங் குயிலா நீ?

இருட்டாயிருந்த
என் வானத்தில் தோன்றிய
நிலவொளியா நீ?

உள்ளமெனும் கனியை
சுவை பார்த்த
சிறு அணிலா நீ?

மனச் சோலையில்
அழகாய் பூத்த
சிவப்பு ரோஜாவா நீ?

என் மனசை
மெதுமெதுவாய் கொத்தும்
கோழிக்குஞ்சா நீ?

எனக்குள்ளே
பதிந்துபோன
முதல் கவிதையா நீ?

மெது மெதுவாய்
என்னில் உதித்த
வளர் பிறையா நீ?

எனை களவாடிச்
சென்றுவிட்ட
வாலிபக் காற்றா நீ?

எனக்குள்ளே
ஒன்றி விட்ட
என்னவனா நீ?