என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, August 5, 2014

பனித்துளியா நீ?

என் ஞாபகப் புற்களில்
அமர்ந்து கொண்ட
பனித் துளியா நீ?

இதயத்தின் கீதங்களை
மொழிபெயர்த்துப் பாடிய
இளங் குயிலா நீ?

இருட்டாயிருந்த
என் வானத்தில் தோன்றிய
நிலவொளியா நீ?

உள்ளமெனும் கனியை
சுவை பார்த்த
சிறு அணிலா நீ?

மனச் சோலையில்
அழகாய் பூத்த
சிவப்பு ரோஜாவா நீ?

என் மனசை
மெதுமெதுவாய் கொத்தும்
கோழிக்குஞ்சா நீ?

எனக்குள்ளே
பதிந்துபோன
முதல் கவிதையா நீ?

மெது மெதுவாய்
என்னில் உதித்த
வளர் பிறையா நீ?

எனை களவாடிச்
சென்றுவிட்ட
வாலிபக் காற்றா நீ?

எனக்குள்ளே
ஒன்றி விட்ட
என்னவனா நீ?