என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, July 17, 2014

நீ ஒரு குழந்தையாக

நெடிதுயர்ந்த
ஒரு ஆலமரம் போன்ற
உன் காதலில்
கூடு கட்டி வாழ்ந்திருக்க
விருப்பம் எனக்குள்!

அருகருகே
இருந்துகொண்டே
நம் வாழ்நாளை
கடத்திவிட
பிரார்த்தனை எமக்குள்!

காதலை மட்டுமே கொண்டு
மற்றதெல்லாம் தவிர்ந்து
ஒரு எல்லையில்லாப் பெருவெளியில்
பயணிக்கிறதெம் உறவு!

தினம்தினம் குறுஞ்செய்திகள்
நள்ளிரவு ரகசியக் குரல்கள்
கடிதங்கள்.. வாழ்த்தட்டைகள்
எதுவுமேயில்லாமல்
யதார்த்தபூர்வமாய்
நகர்கிறது நம் நேசம்!

பக்கத்தில் நீ வந்திருந்தபோதுதான்
என் பெண்மையின் நாணமும்
உன் ஆண்மையின் வீரமும்
சிநேகபூர்வமாகின!

வாழ்வதற்காக காதலே தவிர
காதலுக்காக வாழ்க்கை அல்ல
என்ற நம் சித்தாந்தத்திலிருந்து
என்றுமே நாம் விலக நினைத்ததில்லை!

நீயில்லாத நிமிடங்களில்
உன்னை
என் காதலனாய்
கணவனாய் எண்ணி
கனவுகள் வளர்க்கும் நான்..

கண் பார்வைக்குள் அடங்கி
என்னருகில் நீ இருக்கையில்
உன்னை ஒரு குழந்தையாக
பார்த்து மகிழ்கிறேன்!

காதலுக்குள் தாய்மையும் இருக்கிறது
என்பதைப் புரிய வைத்தவனே..
நீண்ட நாள் பிரிவைத் தாங்க முடியாது..

ஒரு வனாந்தரத்து இருட்டை
எனக்குள் தந்துவிடாமல்
பூக்களால் நிறைந்த
என் இதயத்தை
உனக்குள் வசமாக்கிட வா!!!