என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, June 23, 2014

எரிக்கும் சுவாசம்

உண்மையையும்
உதாசீனத்தையும்
புரிய வைத்ததே நீ தானே..
அப்படியிருக்க
துகள்துகளாக
இதயக் கண்ணாடியை உடைத்துவிட்டு
இப்போது
அது தெளிவாக இல்லை
என்பது ஞாயமா?

பாசத்தை மட்டுமே
பகிரத் தெரிந்த என்னால்
பாசாங்கு பண்ணத்தெரியாது
என்ற உண்மையை அறிந்த பின்பும்
குறை சொல்தல் ஞாயமா?

உயிர்மூச்சின் துளிகளில் எல்லாம்
உனக்கான சுவாசித்தலை செய்த போது
உள்ளுணர்வேயின்றி
உன் அகங்காரத்தை காட்டியது ஞாயமா?

உனக்காக எதையும்
விட்டுக்கொடுக்கத் தயார் என்று நானிருந்தபோது
எதற்காகவும் என்னை இழக்க நீ
தயாராயிருந்தது மட்டும் ஞாயமா?

என் இதயத்தை
உன் விழியிடம் ஒப்படைத்துவிட்டு
சந்தோஷித்திருந்தபோது
அதைப் புழுவாக
சுடுமணலில் இட்டு வதைத்தது ஞாயமா?

இப்போது மட்டுமென்ன
உன் வார்த்தைகளாலும் செய்கையினாலும்
தண்ணீர் வற்றச்செய்த
என் மன நதியில்
நீச்சலடிக்க நீ நினைப்பது
ஞாயமா?